பாட்டி
எண்பத்தெட்டு வயது வரை உயிரோடிருந்த சீனிமுத்து பாட்டி அதுவரை தன் உயிரை கெட்டியாய் பிடித்திருந்தது வாழ்க்கையின் மீதிருந்த பற்றினால் அல்ல.தனக்கொரு பிள்ளையைக்கொடுத்துவிட்டு இளம் வயதிலேயே உயிரை விட்ட கணவனுக்காகவும் இல்லை. பிறந்த குழந்தை மனவளர்ச்சி குன்றியது தெரிய ஐந்து வருடம் ஆன நிலையில் அதற்குப்பின் ஒவ்வொருநாளும் அந்தக்குழந்தையின் உயிர்ப்பிக்கே செலவிட்டாள். கூலிவேலை செய்தாள், சித்தாள் வேலையும் செய்தாள்.சித்தாள்களை பற்றிய தவறான கட்டுகதைகள் பரவ, கொஞ்ச காலம் விறகு சுமந்தாள். சொற்ப வருமானத்தில் அவன் மானம் காக்க துணிகள் தைத்தாள். வளர்ந்தான் அவன். பள்ளியிலும் சேர்க்கமுடியவில்லை. சக சிறுவர்களும் சேர்ப்பாரில்லை. அவள் முதுமையை கைப்பிடித்தபோது அவனை அரம் அடிக்கும் கொல்லனிடம் துருத்தி ஊத அனுப்பினாள். அன்றாடம் ஐந்துரூபாய் சம்பளம். அதில் கழிந்தது சில காலம். எவராயிருந்தாலும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் அப்படி ஒரு வயிற்றுவலி.அப்படியும் பொறுமையுடன் பொங்கிப்போட்டாள். மகனுக்கு திருட்டுப்பழக்கம் உள்ளதென அக்கம் பக்கம் பேசுகையில் மௌனம் மட்டுமே காத்தாள். சாராயக்கடையில் ஒருவனுடன் பார்த்ததாக சொன்னபோதும் காதில் எதுவும் போட்டுக்கொள்ளவில்லை.ஒருத்தி தன்னை குளிக்கும் போது பார்த்துவிட்டான் என சொல்லியகனம் அன்று மதியமே ஒரு கிணற்றில் விழுந்து விட்டாள். ஊருக்கே தெரிந்து சாயங்காலம் சிதைந்த அவளின் சடலம் மீட்கும் வேளை, மலம் கழிக்கும் ஒரு பெண்ணை புதரில் மறைந்திருது பார்த்துக்கொண்டிருந்தான் அந்த மூதாட்டியின் மகன்.
Comments
Post a Comment